"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, June 28, 2013

பொதிகை மலை பயணத்தொடர்...1


கடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..

எனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)

அட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா? வேண்டாமா? என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..

யாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள  வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

Office of the Wildlife Warden,
Wild life Division ,
Vattiyoorkkavu .P.O,
PTP Nagar,
Thiruvananthapuram.
Fax No. 0471-2360762
Phone No. 0471-  2360762


பிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும்.  நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

நேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.

டிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.

இப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Tuesday, April 30, 2013

நம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி


சுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.

தனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.

நான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.

அவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதியில் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.

காலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.

சற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.

காசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)

இந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன?

போனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...

எந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.

நான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்னால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.

செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்

Sunday, March 24, 2013

விபத்து - விதியின் சதியா

காத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

 நகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள்  சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.


ஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது  தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன்  பாட்டியின் கையை உதறிவிட்டு,  மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.
அந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.

வேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி  வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.

டயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள,  நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.

வலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து  எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை  தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர்  நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.

யாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...

Friday, February 22, 2013

விதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன?

விதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன? அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது?

மழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி..  மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..

சரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். விதியை வெல்ல முடியா மதி :)

ஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள்.  மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.

நேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.

இந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)

மனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.

ஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.

நான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் உண்மை..:)

 மனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம்.  ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.  இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம்.  இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....

கடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. அவ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.

அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(

சரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்?


இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா?

இந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......






Sunday, February 17, 2013

விபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை

விபாஸ்ஸனா என்றால் என்ன ?

விபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் ? இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.?

உங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க,  பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..
 

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)

வருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத  10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்தை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)

இருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.

நிகழ்காலத்தில் சிவா