"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 14, 2013

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!

கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறது தான்.

 எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும்.

சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.

 இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.

இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன் தினமலர் 13/01/2013 நாளிதழில் சொல்லியது நன்றியுடன்

Saturday, January 12, 2013

"நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' வேண்டாம்!

சென்னை, அறிஞர் அண்ணா மருத்துவமனையின் இயற்கை நல மருத்துவ பேராசிரியர் ஹிமேஷ்வரி:

 நல்ல உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருத்தரால், தான் நினைச்சதை அடையவே முடியாது.உங்க உடம்புக்கு, என்ன நேரத்தில், என்ன செய்யணும்னு, "செல்'களுக்கு நல்லா தெரியும். கண்ணுல தூசி விழுந்தா, கண்ணை, "டேமேஜ்' பண்ணாம, அந்த தூசியை வெளியே தள்ள, உங்களுக்கு தெரியாது. ஆனா குறிப்பிட்ட செல்கள், கண்ணீர் மூலமா வெளியே கொண்டு வந்துடும். இப்படி பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்ற செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியா நம்மை தாக்குது.நம்மகிட்டே, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குது.168 விதமான, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' நம்ம மனசை பாதிக்குது. அதுல ஒண்ணோ, ஒண்ணுக்கு மேற்பட்டோ, நம்மைத் தாக்க ஆரம்பிச்சாலே போதும்... நம்ம உடம்புக்கு நோய் வந்துடும்.

நமக்கு பசி வந்தா, உடனே நம் அறிவு,"சாப்பிடு'ன்னு சொல்லுது. அந்த நேரம் பார்த்து, கவலையான ஒரு நியூஸ் வருதுன்னு வச்சிக்கலாம்; சாப்பிடாம விட்டுருவோம். கவலைப்பட்டதால், அறிவு வேலை செய்ய மறுத்து, உடலோட தேவையை செய்ய விடாம பண்ணிருது.ஒரு மருத்துவரோட முதல் கடமை, மனசை சரிபண்றது தான். துரதிஷ்டவசமா, வணிக நோக்கில் இன்னிக்கு, நோயாளியை அமைதிப்படுத்தறதுக்கு பதிலா, பயமுறுத்துதல் அதிகமாயிட்டுப் போகுது. பயம் இல்லாம யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்களுக்கு, நோய் சீக்கிரம் குணமாயிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண சில பயிற்சிகள் இருக்கு."இந்த நோய் குணமாகட்டும்'ன்னு, நம்ம இம்யூன் சிஸ்டத்திற்கு, அப்பப்ப சில, "கமாண்ட்' கொடுக்கலாம். நம்மை அமைதிப்படுத்தும் வழிபாடுகள், தானம் செய்வது, பிறருக்கு உதவுவது எல்லாம், நம்ம மனசை சந்தோஷப்படுத்தி, நோய்கள் இன்றி இருக்க தான்

நன்றி : தினமலர்


Tuesday, January 8, 2013

ஆண்கள் சந்தர்ப்பவாதிகளே....

பனியன் தொழில் நிறுவனத்தில் அன்றாடம் தொழிலாளர்கள் மாறுவது மிகச் சாதாரணம். சுமார் ஒரு வாரம் இரண்டு வாரத்திற்குள் அலைவரிசை ஒத்துவரக்கூடியவர்கள்  மனம் ஒத்து தங்களுக்குள் (பால்) உறவை ஏற்படுத்திக்கொள்வது சாதரண விசயம்தான். இதனால். யாருக்கும் நட்டமில்லை.  இங்கே கற்பு என்பதெல்லாம் கக்கூஸ் என்ற் அகராதியில் இல்லாத வார்த்தை போலத்தான் :)

சரி இப்படி இணையக்கூடியவர்களில்  ஒரு கட்டத்தில் சலித்து, இன்னபிற காரணங்களினால் அப் பெண்விலகும்போது இவனும்  புரிதல் உள்ளவனானால் விலகிவிடுவான். அல்லது தவறானவன் எனில் இவனது மிரட்டல் ஆரம்பமாகும். இன்னும் சிக்கலாகும்போது நண்பர்களுக்கு விருந்தாக வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த சூழ்நிலைகளும் தனித்தனியாக நடந்தால் பிரச்சினை இல்லை. இங்கே கூட்டணி குழப்பம் வரும்போது பெண்மீதான தாக்குதல் நடைபெறும்.

இது ஓரளவு நடுத்தர வயதுபெண்களாக இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை . இப்படித்தான் திருப்பூரில் நடுத்தர வயதுப்பெண் மதியவேளையில் , நகரத்தில் முக்கிய இடத்தில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடைகளின்றி தாக்கப்பட்டு மயங்கிக்கிடக்க அது பெட்டிச் செய்தியானது. அத்தோடு மறக்கப்பட்டது.

இதை இங்கே குறிப்பிடவேண்டிய அவசியம் ஆணின் தவறுகளை நியாயப்படுத்துவது அல்ல.. ஆண் தவறு செய்ய பெண் எந்த அளவு இடம் கொடுக்கிறாள் என்பதை கவனத்தில் வைக்கத்தான் ...

ஆண் எப்போதுமே சந்தர்ப்பவாதிதான்....அவனுள் இருக்கும் பரம்பரை மிருககுணம்தான்.. இது ஆண்கள் எல்லோருக்கும் ஜீனின் வழிவந்த குணம்.  ஆண் பெண்ணோடு உறவுக்கு விரும்புவது என்பது உயிரினம் அழியாமல் இருக்க இயற்கை செய்திருக்கிற ஏற்பாடு.. இதில் குடும்ப அமைப்பு என்பதுவும் சந்ததி பெருக்க நடவடிக்கைதான். ஆனால் சந்ததி பெருக்கத்திற்கு மட்டுமின்றி சுகத்துக்கென பாலுறவை ஏற்படுத்திக்கொள்வதில் முதலிடம் மனிதனுக்கு மட்டும்தான்.

டெல்லி விசயத்தில் உடை ஒரு காரணமாக இல்லாதபோதும், எவனோட சுற்றுகிறாள் என்ற் அம்சமே முன்னிலையில்....இங்கே சரி எது தவறு எது நான் ஆராயவில்லை. சூழ்நிலைகளை உருவாக்கியதில் அப்பெண்ணின் பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். இத்தாக்குதலில் சம்பந்தபடட் ஆண்களுக்கு தண்டனை அவர்களின் உறுப்பு சார்ந்ததாகவே இருக்க வேண்டும். இது அவர்களுக்கான் தண்டனை. சில வருடங்கள் கழித்தேனும் தூக்கில் இடலாம். இது மற்றவர்களுக்கு எச்சரிக்கைக்காக....இரவு நேர ஊர்சுற்றல் எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது . அதனால்  உடை கட்டுபாடு இரவு நேரச் சுற்றல்களை தவிர்த்தால் நன்மை பெண்குலத்துக்குத்தான்..

 பெண்ணைக்கண்டால் ஆண் ஈர்க்கப்படுவது இயல்புதான். இதுதான் பிள்ளையார் சுழி.. மேலும் ஈர்க்கப்படுகிற வாய்ப்பை ஆணுக்கு ஏற்படுத்தித் தரவேண்டாம் என்பதே வேண்டுகோளாய் பெண்களிடத்தில் வைப்பது.

அதைவிட்டுவிட்டு பெண் சுதந்திரத்தில் குறுக்கிடாதே.. ஆடை உடுப்பது அவர்கள் விருப்பம். நீ திருந்து என்றால் என்ன லாஜிக்னு தெரியல.. அடுத்தவரை திருந்து என்று சொல்வதை எளிது. ஆனால் ஒரு பைசா பிரயோசனம் இல்லை. நடக்காத விசயம். ஆனால் தான் திருந்துவது எளிது.
என் வீடு நான் என் விருப்பப்படி (முதுகுல) தான் கதவு ஜன்னல் வைப்பேன். திறந்தும்கூட இருக்கும். நீ என்ன ......க்கு திரும்பிப்பார்க்கிற திருந்து.. திறந்து வச்சிருந்தா உள்ள வந்திருவையா .. இப்படி பெண் பேசினால் அடிபட்டாத்தான் திருந்துவீங்க என்றும் ஒதுங்க வேண்டியதுதான்..

ஒருவேளை பெண்களுக்காக ஆண் பரிந்து பேசினால் கொஞ்சம் நஞ்சம் சைட்டு அடிச்சிட்டு இருக்கிறோம். அது பொறுக்கலையா என்றும் கேட்பதாகவும் எடுத்துக்கொள்கிறேன். :)))))))))))

மற்ற நாடுகளின் சூழல் எனக்குத் தெரியாது. அதனால் இந்தியச் சூழலில். குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் தன்மையான பார்வை அல்ல இது. பாதிக்கப்படுபவர் யாரோ அவருக்கு இந்த எச்சரிக்கை.

திருடனுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்காதே என்றால் அதைச் செய்யாமல் திருடன் திருந்தவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு என்னைப் பொருத்தவரை அநியாயம்தான் :)

 பாலியல் சம்பவங்களில் உடல்ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே..
படித்தால் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் சற்று பொறுமையாக யோசித்தால் பெண் இடம் கொடுக்காமல் இது நடந்திருக்காது என்பது புரியும் :(

எனவே பெண்கள் பொது இடங்களில் நடத்தையிலும், உடை ஒழுக்கம் காப்பதுவும் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். தன் உடலை காட்சிப்பொருளாக சற்று நாகரீகமாக காட்டுவது என்பது தான் தற்போதய நவீன உடைக் கலாச்சாரம்.  பெண்கள் இவற்றிலெல்லாம்  தெளிவாக இருந்துவிட்டு, அதன் பின் ஆண்களைத் திருந்தச் சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

கோவியாரின் இடுகையைப் படித்தவுடன் ஜிந்திச்சது :)

Wednesday, December 19, 2012

பயனற்றதைப் பேசாதே...ஓஷோ

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும். வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும். இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம். இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் நமது மன உளைச்சலுக்கும் அமைதி இன்மைக்கும் காரணமாகவும் அமைகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும். மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு  நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர  வாழ்கையை முழுமையாக வாழ முடியாது:)

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள். எவ்வளவு நேரம் முடியும்? சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும். அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது  இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல். இதுவே தியானத்தில் நடப்பது.:)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம் :)

Tuesday, December 11, 2012

திருப்பூர் பதிவர் சந்திப்பு 09/12/2012

வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தகவலை நண்பர் ஜோதிஜி பகிர்ந்து கொள்ள முதலில் தொடர் வேலைகளினால் அப்புறம் பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். பின்னர் நடக்கிற இடம் உள்ளூரில் என்பதால், கலந்து கொள்வோம் முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள செண்பகம் மக்கள் சந்தை என்கிற டிபார்மெண்டல் ஸ்டோரில் ஆஜராகிவிட்டேன்.

இந்த விழா தொழிற்களம், மக்கள் சந்தை, தமிழ்ச்செடி என்கிற அமைப்புகளின் சார்பில் நடப்பதாக பேனர் தெரிவிக்க சற்று யோசனையோடுதான் இருந்தேன். கடைசியில் MLM வியாபாரமுறையில் கொண்டு நிறுத்தி விடுவார்களோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. :)

10 மணிக்கு விழா என்ற் உடன் சரியாக விழாவின் சிறப்பு அழைப்பாளார் திரு.சுப்ர பாரதி மணியன் வருகை புரிய இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதி இருந்தபோதும் இவரை எனக்கு என் தொழிற்கூடத்திற்கு அருகில் தாய்தமிழ்ப் பள்ளி என்ற ஆரம்பப்பள்ளி நடத்திவருபவர் என்ற வகையில் அறிமுகம். ரூபாய் நூறுக்கும் குறைவான மாதக்கட்டணத்தில் மூன்றாம் வகுப்பிற்கு மேல்தான் ஆங்கிலம் என நடுத்தர, மக்களுக்கு இவரது சேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவர் வளர்ந்துவரும் எழுத்தாளர் நா.மணிவண்ணனை பாராட்ட பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஒவ்வொருவராக வர அடுத்த கால்மணிநேரத்தில் அரங்கம் உற்சாகமானது :)

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டம் கலந்துரையாடல் போல தொடங்கியது. சுப்ரபாரதி மணியன் பேசும்போது போஸ்ட்மார்டனிசம் என்பதன்படி மையத்தில் இருப்பவர்களுக்காக விளிம்பில் இருப்பவர்கள் எல்லோரும் இயங்க வேண்டி இருக்கிறது. அதுபோல் எழுத்துலகில் சில எழுத்தாளர்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த போதும், மற்றவர்கள் படிப்பதையும் விமர்சிப்பதையும் தவிர்த்து ஏதும்செய்ய முடியாத சூழலில் புத்தகம் வெளியிட அவசியம் இல்லாது தனது கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்த இணையம் உதவுகிறது, என்றும் இந்த ஒன்றே விளிம்புநிலை வாசகர்களை மையத்தை நோக்கி பயணிக்கச் செய்து இன்றைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. அந்தவிதமாகவே நா.மணிவண்ணனுக்கான பாராட்டும் பொருந்தும் என்றார்.



அடுத்து பதிவர்கள் சுய அறிமுகமாக நிகழ்ச்சி பயணிக்கத் தொடங்கியதும் அதில் மெட்ராஸ் ப்வன் சிவகுமார் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பை ஒட்டி ஜோதிஜியால் மேடைக்கு அழைக்கப்பட்டு பேச ஆரம்பித்தார். தமிழ் வளர்ச்சியில் தமிழரின் பங்காக தமிழன் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதையும், தமிழை கிண்டல் செய்வதையும் தவிர்த்தால் போதும். தூய தமிழுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் வரும்காலத்திலும் இப்போதும் ஆங்கிலம் இன்றி சம்பாத்தியம் இல்லை என்று சொல்ல. கோவை மு சரளா ஊடாடிய கருத்துகளை தெரிவிக்க இரு தரப்பின் கருத்துகளும் சந்தேகமின்றி பார்வையாளர்களுக்குத் தெளிவானது. இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு துளிகூட மோதலோ, கடுமையோ, இன்றி இயல்பாக அமைந்ததை உணர்ந்தேன்.

செண்பகம் மக்கள் சந்தை என்ற டிபார்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு. சீனிவாசன் வந்தவர்களுடன் அன்போடு எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பழகினார். நிகழ்வு நடத்த இடத்தையும் வழங்கி, தேநீர் பிஸ்கெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கூட்டத்தில் அவரது கடைக்கு வந்த நண்பர் தம்பதியினரை வர வைத்து பேச வைத்தார். அவர் இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் கவிதையும், கதையும் எழுதுவதோடு மற்ற்வர்களுக்கு பயன் தரும் கருத்துகள் எழுத வேண்டினார். இதோடு நான் முரண்பட்டாலும் தெரிவிக்கவில்லை.:)

இணையம் என்கிற பொதுவெளியை தன் திறமையினை வெளிக்கொணரும் இடமாகவே பயனாளர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே என் அவா. கவிதையோ, மொக்கையோ நகைச்சுவையோ இயல்பாக வெளிப்படுத்திப் பழகி, மெருகேற்றிக்கொள்ள இணையவெளியை பயன்படுத்தவேண்டும். எல்லோரும் அறிவுரை சொன்னால் இணையம் தாங்காது :) வராததை முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை

மணிவண்ணன் எனக்கு பேச வராது என்று யதார்த்தமாக சொல்லி, தனது எழுத்து சிறுமுயற்சிதானே தவிர இன்னும் வளரவேண்டிய இடத்தில்தான் இருக்கிறது என்றார். இன்னும் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள இந்த பரிசு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

தமிழ்ச்செடி குறித்து இரவு வானம் சுரேஷ் விவரித்தார். ஜோதிஜி கருத்துகளை இணைத்தும் நிகழ்ச்சியை வ்ழிநடத்த இறுதியில் மணிவண்ணனுக்கு நூல் பரிசளிப்பும், நினைவுப்பரிசும் வழங்கப்பட விழா நிறைவடைந்தது. மொத்தத்தில் கூட்டம் கலந்துரையாடல் போல் அமைந்து இயல்பாக சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்த கலந்துரையாடல்,, தேர்ந்த திட்டமிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட நிறைவைக்கொடுத்தது.

இந்தக்கூட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விசயங்கள் என்று எதையும் என்னால் குறிப்பிட முடியாத அளவு சிறப்பாக இருந்தது என்றால் மிகையில்லை.

Wednesday, October 31, 2012

உள்ளுற நோக்குதல் - விபாஸ்ஸனா

தீபாவளி பக்கம் வந்துவிட்டது. இன்னும் 10 நாட்களே இருக்கையில் அதற்குப் பின்னதாக வரும் லீவு நாட்களை , மனதில் கொண்டு  ஓட வேண்டி இருக்கிறது.

அன்றாட வாழ்க்கையும், அதை உரசல் இல்லாமல் நகர்த்த பணம் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட பணத்தின் மீது பற்றுதல் இல்லை என மனம் சொன்னாலும் பணத்தின் பின்னால் ஓட வேண்டி இருக்கிறது என்பதே நிதர்சனம்.. இது ஒன்றும் கடினமான பணி அல்ல. சற்றே அயர்ச்சியைத் தரும் பணி அவ்வளவுதான்.

இங்கே அயற்சியை உணர்வது உடல் அல்ல.மனம்தான் :)

இச் சூழ்நிலையில் மனதைப் பயன்படுத்துவதில் வரும் சிக்கல்களுக்கு தீர்வு என்ன. என்று பார்த்தால் மனதிற்கான வடிகாலாக, தற்காலிகமாக கவனத்தை இடமாற்றம் செய்வது......திசைதிருப்புவது மற்றும் கவனஈர்ப்புதான்... ஆடல், பாடல் திரைப்படம், கிண்டல், கேலி இணையம் என மனதை வெளிப்புறமாக திசை திருப்புதல்தான் நடக்கின்றது.

 சில சமயங்களில் இவை தற்காலிக நிம்மதியைக் கொடுத்தாலும் கிண்டலும் கேலியும் இருக்கிற நிம்மதியையும் கெடுத்துவிடுகின்றன.:( இணையத்தில் டிவிட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளே இதற்குச் சாட்சி.

நமக்கென ஒரு மனத்தோற்றத்தை நாம் ஒவ்வொருவரும் வைத்துகொண்டுள்ளோம். நாம் பார்க்க விரும்பும் தோற்றத்தைப் பார்க்கின்றோமே  தவிர நாம் உண்மையைப் பார்ப்பதில்லை.:)  பிறரும் அவ்வாறே பார்க்கவேண்டும் என விரும்புகிறோம். அவ்வாறு இல்லையெனில் புரிதல் இல்லாது பிரச்சினைகள் பெரிதாகின்றன.

நமது வாழ்க்கை முழுவதும் நாம் புறத்தே பார்த்தே பழகிவிட்டோம். வெளியில், நடப்பது என்ன என்பதிலும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலுமே எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்துவந்திருக்கிறோம்.

நம்மையே. நமது மன உடல் கூட்டமைப்பையே, நமது சொந்த செயல்களையே, நமது சொந்த உண்மையையே நாம்  ஒருபோதும் முழுமையாக ஆய்வு செய்ய முயற்சித்ததே இல்லை.  நாம் நம்மை அறியாமலே இருந்து வருகின்றோம். இந்த அறியாமை எவ்வளவு தீமையானது என்பதை நாம் உணர்ந்தவர்களும் இல்லை.

நம்முள் இருக்கும் மன உந்துதல்களுக்கு நாம் எவ்வளவு அடிமையாக இருந்து வருகின்றோம் என்பதைப் பற்றி அறியாமலும், புரியாமலுமே இருந்து வருகிறோம். உண்மையை புரிந்துகொள்ள இந்த உள்ளிருள் நீக்கப்பட வேண்டும்.

இதற்கான நெறிதான் தன்னையே உற்று நோக்கும்  விபாஸ்ஸனா தியானமுறை.

நம்மையே உற்று நோக்குவதால், நமது மனதை மூடுகின்ற, மறைக்கின்ற நம்மிடமிருந்தே உண்மையை மறைக்கின்ற, துன்பங்களை உண்டாக்குகின்ற சில எதிர்வினைகளையும், தவறான எண்ணங்களையும் பற்றியும் முதன்முதலாக விழிப்புணர்வு கொள்கிறோம். இதெல்லாம் படிக்க நன்றாக இருந்தாலும் செயலில் நாம் இறங்காதவரை விழிப்புணர்வை அனுபவிக்க முடியாது.

மனதிற்கான மருந்து தியானம்தான்,  இந்த தியானம் உலகியலிலிருந்து தப்பித்து வாழும் நிலை என்பதாக சிலர் நினைக்கக்கூடும். ஏனென்றால் தீவிரமாக தியானம் செய்வதாக சில அன்பர்கள் வேறு உலகத்திலே மிதந்து கொண்டிருப்பது போல் மற்றவர்களுக்குத் தோன்றும். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.,

விபாசனா என்பது உள்ளுற நோக்குதல்., என்பது பொருளாகும். உள்ளுற கவனித்தல் மட்டுமே...வேறு எந்த விளக்கங்களையும் திணித்துக்கொள்ளாமல் செயலில் இருந்தால் மட்டுமே இது அனுபவமாகும். 

விபாசனாவில் நீங்கள் உங்களை உள்ளுற நோக்குதலுக்குரிய சூழலை ஏற்படுத்தித் தருகிறார்கள். அவ்வளவே..

ஆர்வம் இருப்பவர்களுக்காக
பத்துநாள் முகாம் ஒன்றில் பங்கேற்றுப் பாருங்கள்.  கூடுதல் விவரத்திற்கு இங்கே சுட்டுங்கள்.

 கோவை சார்ந்த பகுதியினருக்காக
முகாம் மற்றும் நாட்கள் இடம் தொடர்பு கொள்ள
10-நாள் முகாம் (ஆண்கள் மட்டும்)
29-நவம்பர்-2012 முதல் 10-டிசம்பர்-2012 வரை
உலக அமைதி நிறுவனம் (Universal Peace Foundation),
நல்லகவுண்டம்பாளையம்,
படுவம்பள்ளி,
கருமத்தம்பட்டி-அன்னூர் சாலை,
கோயம்புத்தூர் - 641659.
1. திரு அரவிந்த் வீரராகவன் - 81481 35795
2. திரு பரத் ஷா - 98423 47244
3. திரு சிவாத்மா - 98422 80205


 சென்னையில்

டிசம்பர் 2012 
1)5-16 தேதி வரை
 

2)19-30 தேதி வரை 

 தம்ம சேது விபஸ்ஸனா தியான மையம்,
533, பழந்தண்டலம் சாலை,
(திருநீர்மலை வழி),
திருமுடிவாக்கம்,
சென்னை 600 044.

தொலைபேசி (தரைவழி): +91-44-64504142, +91-44-24780952, +91-44-24780953
முகாம் குறித்த விசாரணைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தொடர்பு எண்கள்: +91-9444462583, +91-9442287592, +91-8148581350, +91-9042632889, +91-8015756339, +91-9940467453