"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, April 7, 2019

கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை!

கர்ப்பகால உடல் வீக்கம் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், கீதா ஹரிப்ரியா: 

கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து, சில பெண்களுக்கு, கை, முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்; இது இயல்பானது. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என, கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை.சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே, இதை, சரி செய்து விடலாம். 

கர்ப்பிணிகளின் உடலின் தன்மையை பொறுத்து, வீக்கத்துக்கான காரணங்களும், தீர்வுகளும் வேறுபடும். பொதுவாக, கர்ப்ப காலத்தில், உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்து, வழக்கத்தைவிட, 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது, உடல் உறுப்புகள் வீக்கமடைய, காரணமாக அமையலாம்.

கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, கர்ப்பப் பை விரிவடையும். அதனால், அதன் அருகில் உள்ள ரத்தக்குழாய் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, சருமத்தின் அடியில் நீர் கோர்த்து, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். 

அதிகப்படியான ரத்த அழுத்தம் காரணமாகவும், வீக்கம் ஏற்படலாம்.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பு சத்தும், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கை, கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதாலும், வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, உடலில் ஏற்படும் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும், வீக்கத்துக்கு காரணமாகின்றன.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம், மெதுவான நடைப்பயிற்சி அவசியம். இறுக்கமான ஆடை மற்றும் காலணிகளை தவிர்க்கலாம். உடலை விட, கால்களை சற்று உயர்த்தி வைத்து கொண்டால், ரத்த ஓட்ட சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும். 

தொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனைபடி, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.பால், தண்ணீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை, பருக வேண்டும். சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளோர், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலிருந்தே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

நன்றி தினமலர் 07/04/2019

Thursday, April 4, 2019

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)

கோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம்.  சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து  சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது

அடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்

எதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை..  எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது.  எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில்.  இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. 

சிங்காநல்லூர் நகராட்சி மண்டல  அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு ? என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. ? நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க ? வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். ? நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா ? இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.

ஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று  விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்
அவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா ? இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார்.  இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :) 

Tuesday, March 19, 2019

இனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ


அலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின்  இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை.  மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.
சரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான். 
.
இதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது.  சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.

எதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார்.  நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir  என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.


Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

Monday, December 31, 2018

பயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் ?

மனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.  இதுதான் கடந்த இடுகைகளின்  சாரம்.

மனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.

கவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.

இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா? என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)

எனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா? இண்டர்லாக்கா? சிங்கிள் ரிப்பா? லூப்நிட்டா? டர்க்கியா? லைக்ரா பைனா? என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.

ஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)

சரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.

மனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)

இதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா? மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே.  ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)

மனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா?  இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள்.  அது  அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.

வெற்றி உண்டாகட்டும்.


Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா



Wednesday, November 8, 2017

தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ

தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.
சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:

ஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.

இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.

ஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.

அடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது

முழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு
வாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.

உன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்

கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’  என்று அதனிடம் சொன்னால் போதும்.

 உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.

அடுத்து
இன்னும் ஆழமாக,

மனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது.  சிறிது கால அவகாசம்  பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.
உடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.

அடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.

 உடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து
நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு.  உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து. 

 உடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி   இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.

ஓஷோ
தம்மபதம்



Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா